ETV Bharat / crime

போலி தங்க நகைகள் விற்பனை- சரவணா ஸ்டோர் தங்க மாளிகை மீது வழக்கு!

author img

By

Published : Jul 25, 2021, 7:23 AM IST

மருத்துவரிடம் போலி தங்க நகைகளை விற்பனை செய்த சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை கடையின் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Saravana Store Gold Jewelry House
Saravana Store Gold Jewelry House

சென்னை: ஐயப்பன் தாங்கல் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் திரிவேணி(35). மருத்துவரான இவர், சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 22ஆம் தேதி சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை கடை மீது மாம்பலம் காவல் நிலையத்தில் இவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், “கடந்த 2015ஆம் ஆண்டு தனது கணவர் சிவனேசனுடன் தியகராய நகர் துரைசாமி சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை கடைக்கு சென்று மூன்று சவரன் தங்க நகை வாங்கினோம். இதே போல் சரவணா ஸ்டோர் என்ற தரத்தை நம்பி பல தங்க நகைகளை இந்தக் கடையில் வாங்கியுள்ளோம்.

கடந்த 2019ஆம் ஆண்டு சரவணா ஸ்டோரில் வாங்கிய மூன்று சவரன் தங்க செயின் ஒன்று அறுந்து விழுந்த போது, செயினுக்குள் வெள்ளியை சேர்த்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம். குறிப்பாக தங்க நகையின் எடையை கூட்டுவதற்காக வெள்ளியை சேர்த்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த மோசடி குறித்து சரவணா கடை மேலாளரிடம் முறையிட்ட போது தவறு நடந்திருப்பதாக கூறி மன்னிப்பு கேட்டு வேறொரு செயினை மாற்றி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் சரவணா ஸ்டோரில் வாங்கப்பட்ட மற்றொரு நகைக்குள் காப்பரை மறைத்து வைத்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. உடனடியாக மாம்பலம் காவல் நிலையத்திற்கு சென்று இதுதொடர்பாக புகார் அளித்தோம். சரவணா ஸ்டோர் என்ற தரத்தை நம்பி பொதுமக்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் நகையை வாங்கி செல்கிறார்கள்.

அந்த நகையில் இதே போன்ற மோசடியில் ஈடுபடும் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து நீண்ட நாட்களாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், திரிவேணி நீதிமன்றத்தை நாடியுள்ளார். பின்னர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி, திரிவேணி அளித்த புகாரின் பேரில் மாம்பலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி போலி தங்க நகைகளை வழங்கியதாக சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காரில் லிப்ட் கொடுப்பது போல் நகை பறிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.